Wednesday 30 December 2015

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக செய்வார்களா?

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக செய்வார்களா?
------------------------------------------------
கிருஷ்ணன் பாண்டவர்களையும், சகுனி கௌரவர்களையும் கொண்டு இவ்விருவரும் ஆடிய சதுரங்கமாக போரை மையமாக்கி வியாசர் எழுதிய காவியமாகவே மகாபாரதத்தைப்  புரிந்து கொள்ள முடிகிறது. போருக்கு முன் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான அறிமுகமாகவும், அதன்வழி கிளைக்கதைகளும் இருந்தாலும் அனைத்தும் போர் என்ற மையப்புள்ளியில் வரும் போது கிருஷ்ணனும், சகுனியும் சதுரங்கம் விளையாடத் துவங்கி சகுனியின் பக்கம் தோல்வியாக முடிகிறது. நமக்குத் தெரிந்த முடிவுதான் என்றாலும்,  கதையாகப் படித்திருந்தாலும் அதனை காட்சிப்படுத்தி பார்க்கையில் மனதில் அழுத்தமாகவே பதிந்து விட்டது. இது உண்மையா? கற்பனையா? என்ற விவாதத்திற்குள் வர விரும்பவில்லை. இந்த நல்ல முயற்சியும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பும்   அடுத்தது சீதையின் பார்வையில் ராமனின் காவியம் என்று ராமாயணம் தொடரை தர வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகிறது. ஏன் ஆன்மிகம் சார்ந்த அவதாரங்களைப் பற்றி அதுவும் வடமொழியில் எழுதப்பட்ட கதைகள் மட்டும்தான் நாடகங்களாக தயாரிக்கப்பட வேண்டுமா? குறிப்பிட்ட மொழியில் எழுதப்பட்ட அக்காப்பியங்கள் இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக மாற்றப்படுகின்றன. இந்தியாவின் இலக்கியமாக உலகுக்கு அடையாளம் காட்டப்படுகின்றன.  ஆனால் தமிழ்க்காப்பியங்கள் தமிழ்நாட்டுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒன்றாக சுருக்கப்பட்டுவிட்டது.இன்றைய மெகாசீரியல்களைவிட சிலப்பதிகாரம் எவ்வகையில் குறைந்தது? பொன்னியின் செல்வன் காட்சி ஊடகத்தில் பதியப்படவேண்டியது காலத்தின் தேவை இல்லையா? அதை சினிமாவாக மாற்றுவதைவிட நாடகமாக உருவாக்கினால் விரிவான பதிவாக அமையும். புரியாத டப்பிங் சீரியல்களையும், குடும்பத்தைக் கெடுக்கும் மெகாசீரியல்களையும் ஒதுக்கிவிட்டு தமிழ்க்காப்பியங்களையும், தமிழ் வரலாற்றுப்புதினங்களையும் காட்சிவடிவமாக்க தமிழ் சானல்கள் முன்வரவேண்டும். வெறும் டி. ஆர். பி. ரேட்டிங்கை உயர்த்துவதில் காட்டும் அக்கறையை இனியாவது வெகுஜனங்களுக்கு நம்முடைய தமிழ் காப்பியங்கள் சென்றடைவதையும்,  அவை காட்சிஊடகத்தில் பதியப்பட வேண்டிய அவசியத்தையும் "தர்மம் வெல்லும்" என்ற  அதன் உள்ளடக்கத்தைவிடவும் மகாபாரதமும், நாடகத்தின் வெற்றியும் நமக்கு உணர்த்தியிருக்கிற முக்கிய பாடமாயிருக்கிறது.
பார்க்கலாம்! 
தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக யார் செய்கிறார்கள் என்று?

நண்பன்ஸ்ரீஜி

Thursday 3 December 2015

நடிகர்களுக்கா ஓட்டு போட்டீர்கள்? கொள்ளையடித்த அரசியல்வாதிகளைக் கேளுங்கள்

நடிகர்களை விடுங்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல்வாதிகள் என்ன கொடுத்தார்கள்?
----------------------------------------------------
பணம் கொடுத்து உதவாத சினிமா நடிகர்களை திட்டிக்கொண்டே நாம் இந்த கேடு கெட்ட அரசியல்வாதிகளை மறந்து விட்டோமே. கட்சி சார்பில் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா? கொள்ளை அடிப்பது தனித்தனியாக அடித்துக் கொண்டு கொடுக்கும்போது மட்டும் கட்சி சார்பா? தமிழ்நாட்டின் மிகப்  பெரிய கட்சித்தலைவர்கள் வெள்ள நிவாரண நிதி எவ்வளவு கொடுத்தார்கள்? எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்.அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் தகும்.  முக்கியமாக ஆட்சியில் இருந்த /இருக்கும் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மற்ற கட்சிகள். எத்தனை அமைச்சர்கள், எத்தனை MLA, எத்தனை MP, கோடிக்கணக்கில் புரளும் கவுன்சிலர்கள், மாவட்டங்கள், வட்டங்கள், எவ்வளவு அடித்திருக்கிறார்கள். இந்த வெள்ள நிவாரணத்திற்கு பணம் கொடுத்தார்களா? இதுவரை அடித்த கொள்ளை மட்டும் அல்ல இந்த சென்னை வெள்ள நிவாரண நிதியிலும் கொள்ளை அடிக்கப் போகும் இவர்கள் என்ன கொடுத்தார்கள்? நடித்து சம்பாதித்த நடிகர்களைத் திட்டுகிறோம். கொள்ளை அடித்து சம்பாதித்த அரசியல் வாதிகளை விடக்கூடாது. ஒரு கவுன்சிலருக்கே 100கோடி சொத்து இருக்கும் போது MP, MLA, அமைச்சர்கள் எல்லாம் எவ்வளவு சொத்து சேர்த்திருப்பார்கள்? 7 தலைமுறை உட்கார்ந்து தின்னும் அளவுக்கு தனித்தனியாக  சொத்து சேர்த்து விட்டு வெள்ளநிவாரணத்திற்கு கட்சி சார்பில் பணம் கொடுத்தோம் என்று சொன்னால் அடித்த பணம் யாருடையது? திமுக குடும்பம் ஆளுக்கு 1 கோடி கொடுத்தால் எத்தனை கோடி வரும்? அதிமுக ஒன்றும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல. காங்கிரஸ் ஊழல் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்போது  பாஜக ஆளும் கட்சி. எனவே நடிகர்களை விடுங்கள். அரசியல்வாதிகளை தனித்தனியாக கணக்கெடுங்கள். யார் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் சிந்திப்போம்!
இது அரசியல் பேசும் நேரம் அல்ல. அரசியல் பற்றி சிந்திக்கும் நேரம்!
சிந்திப்போம்! செயல்படுவோம்!
#சட்டமன்றத்தேர்தல்2016
#சென்னைவெள்ளம்2015
                      நண்பன் ஸ்ரீஜி 

Wednesday 11 November 2015

வீணாகக் கடலில் கலக்கும் கோதாவரியின் நீரை திருப்பி, கிருஷ்ணாவில் கலக்க வைத்து விவசாயத்துக்கு வழி வகுத்த மெகா திட்டம்

தண்ணீருக்காக தனித்தும் தவித்தும் நிற்பது தமிழகம் மட்டுமே:

ஆந்திராவுக்கு கிருஷ்ணா.

 கேரளாவுக்கு முல்லைப் பெரியாறு.

 கர்நாடகாவுக்கு காவிரி.

Friday 6 November 2015

Thursday 5 November 2015

மதுக்கடைக்குப் பூட்டு! அதற்கே எங்கள் ஓட்டு!

மதுவினால் அரசுக்கு லாபமா?
மேலோட்டமாக யோசித்தால் அப்படித்தான் தோன்றும்.
அரசே மதுபான ஆலை நடத்தி, அரசே  மதுவை தயாரித்து,
அரசே அதை விற்பனையும்
செய்திருந்தால் அரசுக்கு லாபம் என்பது சரிதான். ஆனால் நடப்பது அப்படியல்லவே. மதுபான ஆலை தனியாரிடம்,  மது கொள்முதலும், விற்பனையும் மட்டும்  அரசைச் சார்ந்தது. அப்படியானால் அரசுக்கு  "லாபம் என்பது ஒரு பாட்டிலின்  விற்பனை விலையில் இருந்து  கொள்முதல் செய்ததைக் (அடக்கவிலை) கழித்தது போக மீதிதான் அரசைச்சேர்கிறது அல்லவா?" இப்போது சொல்லுங்கள் யாருக்கு லாபம்?

வரும் லாபத்தை மட்டும் வைத்து மீண்டும் கொள்முதல் செய்கிறார்கள். அப்படியானால் அரசின் கஜானாவுக்கு செல்வது எவ்வளவு?

உதாரணமாக 20000 கோடி மது விற்பனை ஆகிறது என்று வைத்துக் கொண்டால் கொள்முதல் 15000 கோடி போக அரசுக்கு செல்வது 5000 கோடி மட்டும்தான்.

அதாவது "மதுவினால் அரசுக்கு லாபம் என்பது போன்ற மாயையை உருவாக்கி அதன் மூலம் மதுபான ஆலை முதலாளிகளுக்கு அதிகப்படியான பணத்தை கொண்டு செல்லும் வழியே இந்த டாஸ்மாக் "

மனிதனால் முதலில் மது சுவைக்கப்பட்ட காலம் முதல் இதுவரை மதுஇல்லாத காலமென்று நாம் எதையும் குறிப்பிட இயலாது. இருப்பினும் ஏன் மதுவிலக்கு நம் கோரிக்கையாகிறது? உடன்கட்டை ஏறலும், மனித நரபலியும் நிறுத்தப்பட்டது எப்படி அறிவுசார் சமூகத்தில் சாத்தியமோ? அவ்வாறே   மதுஓழிப்பும் கருதப்பட வேண்டும். எனவே  மதுவிலக்கு ஒன்றே நமது இறுதியான உறுதியான கோரிக்கை. 
இருந்தாலும் படிப்படியாக அதை நோக்கி செல்லும் செயல்திட்டமோ, செயல்பாடோ இவ்வரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக தாலுகாவிற்கு 2 எலைட் கடைகள் என்ற அறிவிப்பே கிடைக்கிறது. மதுவால் ஏற்படும் கொடுமைகளுக்கு இணையாக மதுவை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களும் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 'ஜாமீனில் வெளிவர நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' என்று உறுதியுடன் புழல் சிறை கண்ட சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், மனஉறுதியோடு போராடும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, விடாமுயற்சியோடு சட்டப் பஞ்சாயத்து இயக்கம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கோவன், அனைத்திற்கும் மேலாக மது எதிர்ப்புக்காக வாழ்நாள் முழுவதும் போராடி, மது எதிர்ப்பு போராட்டத்திலேயே தன் இன்னுயிரை விட்ட காந்தியவாதி சசிபெருமாள் ஐயா என்று மதுவை எதிர்ப்பவர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் கொடுமைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது நல்லதா?

வரும் தேர்தலில் மதுவிலக்கு மட்டுமே பிரதான கோரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவைக் கொடுத்து ஓட்டு கேட்ட தேர்தல்  போய் இப்போது மதுவை விடுத்து ஓட்டு கேட்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். மதுவிலக்கு பற்றி தேர்தல் வாக்குறுதி தராத கட்சிகளைப் புறக்கணியுங்கள். அதேசமயம் மதுபான ஆலையை நடத்திக்கொண்டே, மதுபான ஆலை நடத்துபவர்களை தங்கள் கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் வைத்துக் கொண்டே மதுவிலக்கு பற்றி வாக்குறுதி தரும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். மதுவிலக்கு  இப்போது இல்லாவிட்டால் இனி எப்போதும் இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு கோஷத்தை முன்வைத்தே தேர்தலை சந்திக்கும். இப்போது நம்முறை நாம் ஒரு கோஷத்தை முன்மொழிவோம். அதை வழிமொழிந்து உறுதிமொழி தரும் கட்சிக்கே வாக்களிப்போம். இதோ நம் முழக்கம்

"மதுக்கடைக்குப் பூட்டு!
அதற்கே எங்கள் ஓட்டு! "

                                              நண்பன் ஸ்ரீஜி 

Wednesday 4 November 2015

திருக்குறள்

திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


பொருள்
 எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு தொடங்குவது போல உலகம் இறைவனை முதலாகக் கொண்டு தொடங்குகிறது.

நண்பன் ஸ்ரீஜி